காலடித் தடங்கள்

வாசிப்பும் எழுத்தும் என் ஆளுமையின் இணை பிரிக்க முடியாத அங்கங்களாக சிறுவயது முதல் எப்போதும் இணைந்தே என்னுடன் பயணித்திருக்கின்றன. 

எரிகின்ற வறுமை, இல்லாமையின் இடைவெளி, நவீனத்துடனான அந்நியம், அறியாம நிறைந்த வெகுலித்தனம், ஏற்கப்படாமையின் வலி... அனைத்திற்கும் மத்தியில், என் வாழ்தலுக்கு திசையையும் அர்த்தத்தையும் வாசிப்பும் எழுத்தும் சிறு வயது முதல் எனக்கு அறிமுகம் செய்தன. 

இந்த ஆர்வம் பட்டதாரியான பின்னரான சில ஆண்டுகளை முழு நேர எழுத்தாளனாக தொழில் புரியவும் என்னைத் தூண்டியது (கண்டி, அக்குறணையைத் தளமாகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த நியூஸ்வீவ் - NewsView என்ற பத்திரிகையில்). 

வாழ்வின் தங்கு தடையற்ற ஓட்டத்தில் பல்வேறு மாறுதல்களும், திருப்பங்களும் வந்து சென்றாலும், எழுத்தின் மீதான என் காதல் பசுமையாகவே இன்னும் இருக்கிறது. 

அந்தக் காதலே தூரிகை என்ற சஞ்சிகையை பல்வேறு சிரமங்களுடனாயினும் நடத்துகின்ற துணிவை எனக்குத் தந்தது. 

நான்கு இதழ்களுடன் அந்த சஞ்சிகை நின்று போயிருந்தாலும் கூட, ஒரு சஞ்சிகையை நடத்தும் அளவுக்குள்ள இயலுமையை எனக்குள் வைத்த இறைவனின் அருள் என் கண்களைப் பனிக்கச் செய்கின்றது.

எழுத்தின் மீதான இந்தக் காதல் ஆங்கிலம் மூலமான இந்த வலைப்பதிவை நடாத்தும் உந்துதலையும் எனக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.

பல்வேறு காரணங்களால் தமிழ் மொழி மூலமான சீரியஸான எழுத்து முயற்சிகளில் ஈடுபடுவது தற்போதைக்கு சாத்தியமற்றதாக இருக்கும் நிலையில், தமிழ் மொழி மூலமான என் பழைய எழுத்து முயற்சிகள் சிலவற்றை மட்டும் இப்போதைக்கு இப்பக்கத்தில் இற்றைப்படுத்தியிருக்கிறேன். 

சில ஆக்கங்களைப் பார்க்கும் போது இவற்றை எழுதி இத்தனை ஆண்டுகள் கடந்து விட்டதா என்று நினைக்கத் தோன்றுகிறது. நடந்து வந்த காலடித்தடங்களின் சான்றாகவும் நினைவுகளாகவும் இந்த எழுத்துக்களே இருக்கின்றன.

இவற்றில் பெரும்பாலானவை இலங்கை, கண்டி மாவட்ட தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை அடிப்படையாக வைத்து வெளிவந்த பிராந்திய இதழ்களில் பிரசுரமானவையாகும்.

(01) தூரிகை சஞ்சிகை


சஞ்சிகையொன்று நடத்த வேண்டும் என்ற சிறுவயதுக் கனவு பலருக்கும் இருப்பதுண்டு. அந்தக் கனவு என்னைப் பொறுத்த வரை தூரிகை ஊடாக நிறைவேறி விட்டதாகவே நினைக்கின்றேன். நான்கு இதழ்களுடன் மாத்திரம் இந்த சஞ்சிகை நின்று போய் இருந்தாலும், அந்த சஞ்சிகையை வெற்றிகரமாக வெளிக்கொண்டு வருவதற்கு எடுத்த முயற்சி விட்டுச் சென்ற அனுபவம் சாமான்யமானதாக இல்லை. 


அச்சு வடிவத்தில்  என்றாலும் சரி, மின் சஞ்சிகை வடிவத்தில் என்றாலும் சரி, சஞ்சிகை ஒன்றை வெளிக் கொணர்வது மிகவும் சிரமமானது. 


அதுவும் இல்லாமல், தூரிகையைப் பொறுத்த வரை, அதற்கென்று “தூரிகைக் குழுவினர்” என்று சொல்லும் படியான எந்தக் குழுவும் இருந்ததில்லை. என் மனைவியைத் தவிர வேறு எவரும் இந்த முயற்சியில் தோளொடு தோள் நின்றவர்கள் என்று சொல்வதற்கும் எவரும் இல்லை.


அந்த வகையில், இது ஒரு தனிநபர் முயற்சிாக மட்டுமே இருந்தது. 


இந்த நிலையில், தூரிகை நிலைத்து நிற்றல் என்பது ஒரு வாழ்நாள் தியாகத்தை வேண்டி நின்றது என்பதை மறுதலிக்க முடியவில்லை.


வணிக வெற்றியைப் பெறுவது என்பதும் தூரிகை போன்ற உள்ளடக்கத்தைக் கொண்ட ஒரு சஞ்சிகையால் சாத்தியமா என்பதும் சந்தேகமே...! 


இருப்பினும், சஞ்சிகையின் மின்பிரதிகள் பல நூற்றுக்கணக்கணக்கானவர்களை சென்றடைந்ததன.


இந்தத் தொகை ஆயிரக்கணக்கானவர்கள் என்று சொன்னாலும் அது மிகைப்படுத்தியக்காக இருக்காது என்றே நினைக்கின்றேன்.


நாட்டின் பல்வேறு திக்குகளில் வாழ்பவர்களும் இதற்கு நல்ல ஆதரவை வழங்கினார்கள்.   


எப்படியோ நான்கு இதழ்கள் வெளிவந்தன.  நான்காவது இதழ், மின்  சஞ்சிகையாக மட்டும் வெளிவந்தது.


அடுத்த வந்த நாட்கள் வேலைப்பளு நிறைந்ததாக இருந்தன. தொழில் மற்றும் கல்வி ரீதியான அதிக சுமையான நாட்களாக இந்த நாட்கள்  இருந்தன.


இந்த நாட்களில்தான் பிள்ளைப்பாக்கியத்தையும்

அல்லாஹ் எமக்கு அருளினான். 


மீண்டும் தூரிகையை ஆரம்பித்து நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அந்த முயற்சி கோவிட் 19 போன்ற பல்வேறு காரணங்களால் தடைப்பட்டே போய்க் கொண்டிருந்தது.


இந்த 2024, ஜனவரி, 16 உடன் தூரிகை முதல் இதழ் வெளியீடு செய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.  


தூரிகை தயார்செய்யப்பட்ட போது, யார் மனதையும் புண்படுத்தி விடக்கூடாது என்ற மிகுந்த கவனத்துடன்தான் தயாரித்தேன்.


அந்த சிரத்தையையும்  தாண்டி, எவர் மனதையாவது புண்படுத்தும் வகையில் அது வெளிவந்திருந்தால், அதற்காக இப்போது மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். 


தூரிகை நின்று போனது என்பது பெரிதும் கவலை தந்த விடயம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், இப்போது திருப்பிப் பார்க்கும் போது, அந்த முயற்சி பிரம்மிப்புத் தருவதாகவும், ஆத்ம திருப்தியைத் தருவதாகவுமே இருக்கிறது. 


ஓவ்வொரு தீமைக்குப்  பின்னும் கண்களுக்குப் புலப்படாத எம் அறிவுக்கு எட்டாத நலவுகள் இருக்கலாம். தூரிகை நின்று போனதன் பின்னாலும் அத்தகைய நலவுகள் இருக்கலாம். அல்லாஹ் மட்டுமே அதனை அறிவான். 


இப்போது ஆங்கிலத்தில் எழுதி நிறைவு செய்துள்ள “the  Sri Lankan profession” என்ற நாவலின் ஆரம்ப சில பகுதிகளை உண்மையில் தூரிகையில் “உத்தியோகம்” என்ற பெயரில் தொடர்கதையாக எழுத ஆரம்பித்திருந்தேன்.


நின்று போன அந்த தொடர்கதையைத்தான்  கொரனா லொக்-டவுன் காலத்தில் ஆங்கிலத்தில் விரிவான நாவலாக எழுத ஆரம்பித்தேன்.       


தூரிகை சஞ்சிகை இதழ்களின் லிங்குகளை கீழே தந்திருக்கிறேன். 

தூரிகை இதழ் : 01 (மின்பிரதி இல்லை)


(02) சிறுகதைகள் 

சிறுகதைகள் என்பவை மன உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான எளிமையான இலக்கிய வடிவம் என்பது என் நம்பிக்கை. கடந்த சுமார் பதினைந்து ஆண்டுகளில் தமிழில் சில சிறுகதைகளை எழுதும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. அவற்றை தொகுத்து நூலாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்த போதும், அதற்குரிய வாய்ப்பு அமையவில்லை. முடிந்த வரை, எழுதிய பெரும்பாலான சிறுகதைகளைத் தொகுத்து அவற்றின் லிங்குகளை கீழே வழங்கியிருக்கின்றேன்.

இவற்றில் பெரும்பாலானவை கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு (இரண்டாயிரத்துப் பத்துகளின் ஆரம்பத்தில்) அப்போதிருந்த சூழலுக்குப் பொருத்தமாக எழுதப்பட்டவையாகும். 

யதார்த்தபூர்வமாக கதை சொல்ல வேண்டும் என்ற ஆசை அப்போது அதிகமாகவே இருந்தது. தவிரவும், என் இருபதுகளின் ஆரம்பம் அது. கல்லூரி வேலிகளுக்கு வெளியிலும், நிஜ உலகின் யதார்த்தத்திற்கும் வந்து அப்போதுதான் வாழ்கையைத் துவங்கி இருந்தேன். 

அந்த இளமையின் வேகமும், சமூகத் தவறுகளுக்கு எதிரான கோபமும் கதைகளில் இருந்தன. இதே கதைக் கருக்களைச் சூழ மீண்டும் கதை புனைந்தால், இதை விட பக்குவமாகக் கதை சொல்ல முடியும் என்றே இப்போது எனக்குத் தோன்றுகிறது.

இந்தக் கதைகளை வாசிப்பவர்கள் இந்த விடயங்களைக் கருத்தில் எடுத்து வாசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். சமூகத் தவறுகளைச் சுட்டிக்காட்டத் துடிக்கும் இளைஞன் ஒருவனின் மனசாட்சியாகவும் ஆதங்கமாகவும் மட்டும் இவற்றை வாசியுங்கள்.





ஜனரேஷன் கப் (மே - ஜூன், 2017)


நீங்க என்னோட எரக்கமில்லை. 

சீ…இவன நம்பி (செப்டம்பர், 2013)


மழையிருட்டு (ஜனவரி, 2012)

தூரம் (டிசம்பர், 2011)

நிபந்தனைஇல்லை (நவம்பர், 2010)

மெழுகுவர்த்தி 

புள்ளடசாச்சிக்கு கஸ்டமாம் (ஜூன், 2012)

ஏ-லெவல்ரிஸல்ட் (பெப்ரவரி, 2012)


நாவு முடிச்சு (ஏப்ரல், 2017)


(03) நேர்காணல்கள் 

கண்டி, மாத்தளை மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு துறைகளில் சாதித்த ஆளுமைகள் பலரை நேர்காணல் பெறும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. 

இந்த ஒவ்வொரு நேர்காணலும் சிறந்த கற்றல் அனுபவமாகவே இருந்தது. இவையும் பல ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்டவையாகும். இந்த நேர்காணல்களில் சிலவற்றை கீழே தந்திருக்கிறேன்.

01. "எழுத்து எனக்கு ஆத்ம திருப்தியைத் தருகிறது", 



03. "ஆசிரியர் பணியின் அரை நூற்றாண்டு", அளவதுகொடை, மாவதுபொல எஸ்.எச்.எம். ஸவாஹிர் ஆசிரியருடன் ஒரு சந்திப்பு (ஏப்ரல், 2017).

04. "பரீட்சை நடந்து கொண்டிருக்கும், வெளியே குண்டு சப்தங்கள் கேட்கும்"அக்குறணை அஸ்ஹர் கல்லூரி, முன்னாள் பிரதி அதிபர் முனவ்வரா ரமீமுடன் ஒரு சந்திப்பு (02, மார்ச், 2017).

05. "புத்தகம் வாங்குவது ஒரு செலவல்ல... அது ஒரு மூலதனம்" புரவலர் ஹாஷிம் உமருடனான நேர்காணல் (மே -ஜூன், 2017).

06. மெய்யியல் என்பது ஒரு விசாரணை முறை, கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் (மாதம் மற்றும் ஆண்டு ஞாபகம் இல்லை. 2012 ஆம் ஆண்டு பிரசுரமானதாக ஞாபகம்).

07. "நாம் கல்வியை உருவாக்கவில்லை", அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம். மஸாஹிர், (ஒக்டோபர், 2011)

08. "சமூகம் பணத்தை வைத்து மனிதர்களை எடைபோடுகிறது", ஏ.ஏ.எம். புவாஜி, எழுத்தாளர் (செப்டம்பர், 2011).

09. பொது மக்கள் ஆதரவு இஸ்லாமிய வங்கித் துறையின் வளர்ச்சிக்கு மிகவும்  முக்கியமானது, எம்.எம்.எஸ்.குவைலித், வங்கியலாளர்.

10. கம்பளை ஸாஹிராவால் உடுநுவரை நேரடிப் பிரயோசனம் அடைந்தது, மௌலவி இஸட்.ஏ.எம்.ஹனீபா ( 2013ஆம் ஆண்டு என்று ஞாபகம்)  (பகுதி 02).

(04) இறுதியாக...

காலத்தின் சுழற்சியில் பல்வேறு அனுபவங்களை வாழ்கை பதித்துச் செல்கிறது. இந்த அனுபவங்களும், என் கற்றலும் என் பார்வைகளிலும் கருத்துக்களிலும் மிகவும் விசாலமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

என் பார்வையிலும் பேச்சிலும் எழுத்திலும் மேலும் முதிர்ச்சியும் ஆழமும் தேவை என்று எப்போதும் நான் கருதி வருகின்றேன். அதனால்தான் குறைவாகவே எழுதுகிறேன். நிறைய எழுதுதல் என்பதை விட சரியானதையும் தேவையானதையும் மட்டும் எழுதுதல் என்று வைத்துக் கொண்டிருக்கிறேன். நாவடக்கம் அவசியம் என்பது போல, பேனா அடக்கமும் அவசியம் என்று நம்புகிறேன். 

தமிழில் எழுதுவது கிட்டத்தட்ட நின்று போயிருந்தாலும் ஆங்கிலத்தில் எழுத்து முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். அல்லாஹ்வின் உதவியால், அரபு மொழி மூலமான எழுத்து முயற்சிகளிலும் மிக விரைவில் ஈடுபட இருக்கின்றேன்.    

The Sri Lankan Profession என்ற பெயரில் ஆங்கிலத்தில் நாவலொன்றை எழுதி, அதன் முதல் வரைவை (first draft) நிறைவு செய்திருக்கிறேன். இதனை முழுமையாக இந்த வலைப்பூவில் பதிவேற்றி இருக்கின்றேன்.

கண்டியில் அக்குறணை என்ற முஸ்லிம் கிராமத்தில், பெரிய கல்வி, பொருளாதாரப் பின்னணி இல்லாத பெற்றோருக்குப் பிறந்திருந்திருந்தவன் என்ற விடயத்தை வைத்துப் பார்த்தால், கடந்து வந்த பயணம் வலிகள் நிறைந்ததாக இருந்தாலும், அது ஒரு சாதனைப் பயணம் என இதயம் வலிகளுடனும் மனநிறைவு கொள்கிறது. சகல பெருமைகளுக்கும் உரியவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே...! இந்த நீண்ட கால் நடையில், நினைவு கூர்ந்து, நன்றி சொல்லப்பட வேண்டியவர்களும் பலர் இருக்கிறார்கள்.       

எழுத்துப் பணி ஆத்மார்த்தமானதொரு விடயமாக எனக்கு எப்பொழுதும் இருக்கிறது. இறையுதவியிடன், இறுதி வரைக்கும் என் பேனா நல்ல வி்டயங்களை எழுதிக் கொண்டே இருக்கும்.